நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உதவ முன்வந்துள்ளமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உதவுவதற்காக வெளிநாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு கிடைக்கப் பெற்றுள்ள சாதகமான பிரதிபலிப்புக்கள் மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடா ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே இந்தியா – ஜப்பான் இணைந்து இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருப்பதை உறுதிப்படுத்துமாறு ஜப்பான் இதன் போது வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே இவ்விரு நாடுகளிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ள சாதகமான பதிலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க செய்துள்ள டுவிட்டர் பதிவில் , ‘இலங்கைக்கு உதவுவதற்காக வெளிநாடுகளின் கூட்டணியை அமைப்பதில் குவாட் அங்கத்துவ நாடுகளை முன்னிருத்துவதற்கான முன்மொழிவிற்கு இந்தியா மற்றும் ஜப்பானின் நேர்மறையான பதிலுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ‘இலங்கை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான கால கட்டத்தில் இந்தியா வழங்கி வரும் ஆதரவிற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கின்றேன்.’ என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.