Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “போதைப் பாவனையிலிருந்து மாணவர் சமூகத்தை மீட்க ஒன்றிணைவோம்!”

“போதைப் பாவனையிலிருந்து மாணவர் சமூகத்தை மீட்க ஒன்றிணைவோம்!”

2 minutes read

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் சமூகத்திடம் வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரச அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழர் பகுதிகளில் மாணவர் சமூகத்திடம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப் பாவனையால் மாணவர் சமூகம் கல்வி கற்கும் நிலையில் பல்வேறு தாக்கங்களையும், கலாசார சீரழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. இது எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தை நோயாளிகளாக மாற்றுவதோடு பல்வேறு குற்ற நடவடிக்கைகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கும்.

அத்துடன் ஆண் – பெண் என்ற பேதமின்றி போதை என்ற அரக்கன் இளம் சமூகத்தின் சிந்தனை ஆற்றலை அழித்து கல்விச் செயற்பாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தும்.

போதைப்பொருள் மாத்திரைகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஒரு சில மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதானது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் மன உளைச்சல்களையும் வேதனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரைக் காக்கும் புனிதமான வைத்திய தொழில் செய்யும் வைத்தியர்களில் ஒரு சிலர் இளம் சந்ததியினரைக் குறிவைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விநியோகிப்பதுப் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கல்விச் சமூகத்தைத் திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைக்குத் துணைபுரியும் சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வடக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் வடக்கு மாகாண ஆளுநரால் ஒவ்வொரு மாவட்டங்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வடக்கு மாகாண ஊடக அமையம் முன்வைக்கின்றது.

மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதால், பெற்றோர்களின் இயல்பு நிலைமைகள் செயலிழந்து வருவதுடன் பொலிஸாரிடம் தங்கள் பிள்ளைகளைக் கையளிக்கும் அவலங்களும் நடைபெறுகின்றன.

போதைப்பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் அரச அதிகாரிகள் தமது கடமைக்கு மேலதிகமாகப் பணியாற்ற முன்வர வேண்டும்.

அத்துடன் பாதுகாப்புத் தரப்பினர் தமது மூலோபாய தந்திர நடவடிக்கைகளை வகுத்து போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளும் நபர்கள், விநியோகஸ்தர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளையும் மற்றும் தொழில் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டு அமைப்புக்களை ஒன்றிணைத்து வட பகுதியில் மாணவ சமூகத்தில் பரவி வரும் போதைப்பொருள் பாவனையை முற்றாக அழித்தொழிக்க ஒருங்கிணைந்த வேலைத்திட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று வடக்கு மாகாண ஊடக அமையம் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More