“ஒற்றையாட்சி முறையை இல்லாதொழித்து சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தத் தயார் என்பதை தமிழ், சிங்கள மக்கள் அனைவரிடமும் பகிரங்கமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூற வேண்டும். அவ்வாறு கூறும் பட்சத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த ஜனாதிபதியுடனான பேச்சில் கலந்துகொள்வது குறித்து பரிசீலனை செய்வோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாட்டில் ஒற்றையாட்சி முறையை கைவிட்டு, சமஷ்டியை ஏற்படுத்துவதற்குரிய உத்தரவாதத்தைப் பெறாமல், எமக்குரிய பேரம் பேசும் சந்தர்ப்பத்தை இல்லாமல் ஆக்காதீர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கடுமைாயாகச் சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரே நிகழ்ச்சி நிரலில் பயணிகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவதற்காக வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே மேசையில் அமர்ந்து, பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமையன்று நாடாளுன்றில் வைத்து அழைப்பொன்றை விடுத்திருந்தார்.
ஐ.தே.க. சார்பில் தேசியப் பட்டியல் ஊடாகக் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தைப் பெற்று நாடாளுமன்றம் வந்திருந்தபோது, இலங்கையில் சமஷ்டியாட்சியை ஏற்படுத்துவது நடைமுறைக்குச் சாத்திமில்லை என அப்போது ரணில் விக்கிரமசிங்க என்னிடம் தெரிவித்திருந்தார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, சர்வதேசத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்குகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்காக, நல்லாட்சி அரசிடம் பேரம் பேசக்கூடிய மக்கள் ஆணையை எமக்கு பெற்றுத் தாருங்கள் என வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த ஆணைக்கு மாறாக ஒற்றையாட்சிக்கு இணங்கிருந்தனர்.
அன்று இறுதிச் சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு வடக்கு, கிழக்கு மக்களிடம் வாக்குகளைக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், எந்தவித பேரமும் பேசாமல் ஜனாதிபதியுடன் பேச்சில் கலந்துகொள்ளவுள்ளமை அன்று போலவே இன்றும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற செயலாகும்.
கடந்த வருடம் நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, சர்வதேசத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, வடக்கு, கிழக்கு தமிழ்த் தரப்பினரை அழைத்து அவர்களுடன் பேச்சில் கலந்துகொண்டு, நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூற முற்படுகின்றமை சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
இலங்கைத் தீவில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இன நல்லிணக்கத்துக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படுவதற்கு சமஷ்டியே ஒரே வழியாகும்
ஒற்றையாட்சி முறையை இல்லாதொழித்து சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தத் தயார் என்பதை தமிழ், சிங்கள மக்கள் அனைவரிடமும் பகிரங்கமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூற வேண்டும்.
அவ்வாறு கூறும் பட்சத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சில் கலந்துகொள்வது குறித்து பரிசீலனை செய்வோம்” – என்றார்.