“மைத்திரிபால சிறிசேனவும், தயாசிறி ஜயசேகரவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்சக்களிடம் ஒப்படைக்கத் திட்டம் தீட்டுகின்றனர்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கு நான் முன்னின்று செயற்படுவேன்.
என்னைக் கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதற்கு முன்னர், சுதந்திரமாகக் கருத்துக் கோரப்பட வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. கட்சி உறுப்பினரை இடைநிறுத்தும் நடைமுறை கூட தற்போது கட்சியில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை.
இடைநிறுத்தம் பற்றி எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு செய்தால்கூட எனக்குப் பரவாயில்லை. ஏனெனில் மாற்றுத் தரப்பிடம் கட்சி பெயர் பலகை மட்டுமே உள்ளது. மக்கள் சக்தி எமது பக்கம் உள்ளது.
மைத்திரிபாலவும், தயாசிறியும் கட்சியை ராஜபக்சக்களிடம் ஒப்படைக்கத் திட்டம் தீட்டுகின்றனர்” – என்றார்.