“எம்மிடம் தீர்வு திட்டம் உள்ளது. அதனைச் சரியான நேரத்தில் மக்களுக்குத் தெரிவிப்போம்” – என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் அருண் தம்பிமுத்து மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி வந்திருக்கின்றோம். வட்டுக்கோட்டை பிரகடனத்தை உருவாக்கிய கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி. சுதந்திரதினத்துக்கு முன் தீர்வைக் காணுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.
தமிழ்க் கட்சிகளைப் பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்தபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணியை அழைக்கவில்லை. நாடாளுமன்றத்தைப் பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளை மாத்திரமே ஜனாதிபதி அழைப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். ஆனால், தமிழர் பிரச்சினை அவ்வாறான விடயம் அல்ல.
கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளை விடுத்து பேச்சு நடத்துவோம் எனத் தெரிவித்தனர். அதனால் ஏற்படும் பயன் என்ன என்பதை மக்கள் அறிந்திருந்தனர். அதனாலேயே பல பேச்சுவார்த்தைகள் அக்காலத்தில் வெற்றி பெறவில்லை. அதைப்போல் பேச்சுக்கு நாம் சிலரை அழைக்கின்றோம்; நீங்கள் ஒன்றாக வாருங்கள் என்ற நாடகங்களை நடத்துவது அர்த்தமற்ற செயல்.
எம்மிடம் தீர்வுத் திட்டமும் உள்ளது. அது என்ன என்பதைச் சரியான வேளையில் மக்களுக்குத் தெரிவிப்போம். அத்துடன் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தவும் நாம் தயாராகவுள்ளோம்” – என்றார்.