மாநில மரமாகவே இருந்தாலும் தமிழகத்தில் பனை மரங்கள் மற்றும் பனை விவசாயிகளின் வாழ்வு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
பனை மரங்கள்
தமிழர்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்திருப்பது பனை. பனைமரம்தான் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கும் வாழ்வு கொடுத்தது. மன்னர்களும், ஆங்கிலேயர்களும் பனை வருமானத்தில் வரி வசூல் செய்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இப்போது உற்சாக பானமான தேநீர், காபி போன்றவற்றுக்கு மாற்றாகப் பனைவெல்ல பானங்களைத்தான் அருந்தி வந்திருக்கிறார்கள். தேநீருடனும் பனை வெல்லத்தைச் சேர்த்து பருகியிருக்கிறார்கள். வெள்ளைச் சீனி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், பனை வெல்லத்தை விட வெள்ளைச் சீனி விலை அதிகம். ஆனால், இன்று பனை வெல்லத்தின் விலைதான் அதிகம். பனை வெல்லத்தில் அதிகமான சத்துகள் இருக்கின்றன. ஆனால், பனை வெல்லத்தின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, வெள்ளைச் சீனியின் உபயோகம் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது. (இன்றைக்கு மருத்துவர்களே வெள்ளைச் சர்க்கரை உபயோகத்தை குறைக்கச் சொல்வது தனிக்கதை)
பனைத் தொழில் நசுங்க ஆரம்பித்த காலங்களில் மட்டும், கொங்கு மண்டலத்தில் ஓராண்டுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேல் பனை மரங்கள் வெட்டிவீழ்த்தப்பட்டன.
பனைமரங்களிலிருந்து கள் இறக்குவது தடைசெய்யப்பட்ட பின்னர், மரத்தில் பதநீர் இறக்கியவர்கள்கூட கள் இறக்கியதாகக் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று நடந்த சம்பவங்கள் அநேகம். பனை மரங்கள் ஏறும்போது, கைது சம்பவங்களால் ஏற்பட்ட அவமானங்களைத் தாங்க முடியாமல் மரம் ஏறும் தொழிலையே கைவிட்டவர் பலர். இப்படித்தான் பனைத் தொழில் நலிவடைய ஆரம்பித்தது. இருந்தாலும் பனை ஏறுவதில் உள்ள சிரமங்களை ஏற்றுக்கொண்டு தொழிலைத் தொடர்ந்தவர்களும், தங்களது வாரிசுகளை மரம் ஏற அனுமதிக்கவில்லை. அதன் விளைவு பனை மரம் ஏறும் தொழிலை கற்றவர்கள் இன்று அரிதாகிவிட்டனர். இதன் காரணமாக பணம் கொடுத்த பனை மரங்கள் பலன் இல்லை எனச் செங்கல் சூளைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கணக்கு வழக்கில்லாமல் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
பனைத் தொழில் நசுங்க ஆரம்பித்த காலங்களில் மட்டும், கொங்கு மண்டலத்தில் ஓர் ஆண்டுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேல் பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பனைத் தொழில் நடைபெற்ற காலத்தில் அதனால் பயனடைந்தவர்கள் ஏராளம். அப்போது சமுதாயத்தில் தங்களை நிலைநிறுத்த பனை ஒரு கருவியாகவும் இருந்தது. வானம் பார்த்த பூமியில் பனை மட்டுமே அவர்களுக்குக் கைகொடுத்தது. இன்று அந்தப் பனை மரங்களில் பாதியளவு கூட இல்லை என்பது வேதனை. தமிழகத்தின் மாநில மரம் பனை. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் பனை வம்சத்தின் அடிவேர் அறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘இன்றைக்குத் தமிழகத்தில் டாஸ்மாக் வருமானத்துக்குப் பின்னணியில், கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒப்பிடுகிறார்கள், வல்லுநர்களும், பனை ஆர்வலர்களும்.
ஆனால், கம்போடியா, இலங்கை, கேரளா ஆகியவை பனை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இலங்கையில் பனையிலிருந்து கைவினைப் பொருள்கள் முதல் பனையிலிருந்து மது வரைக்கும் தயார் செய்கிறார்கள். பனங்கள், பதநீர் ஆகியவை இலங்கையிலும், கேரளாவிலும் முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை பானமாகக் கருதப்படுகிறது. இலங்கையில் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பானம், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் சத்து மாவு, பனம் பருப்பு போன்றவை உள்நாட்டுச் சந்தையில் நல்ல விலை போவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. கம்போடியாவில் பனைத் தொழிலை நம்பியே பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். பனை மரங்கள் நீராதாரத்தைப் பெருக்க உதவும் என்று பெரிதும் நம்புகிறார்கள்.
இப்போதுதான் தமிழ்நாட்டில் பனை மீட்பை ஓர் இயக்கமாகவும், பிரசாரமாகவும் பல இயக்கங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே பனை விதைகளை நட்டும், அதன் சிறப்புகளை எடுத்துச் சொல்லியும் வருகின்றனர். கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும், பனைப்பொருள்களை ஊக்குவிக்க வேண்டும், பனைமரங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் போன்றவையே பனை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
எழுதியவர்- துரை. நாகராஜன். நன்றி- விகடன்