மிக நீண்ட காலமாக கிளிநொச்சியில் ஆர்வமற்று நடத்தப்படாமல் இருந்த சைக்கிள் ஓட்ட போட்டி நிகழ்வு மீண்டும் கடந்த சனிக்கிழமை, 22.07.2023 அன்று அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்தமாக எழுச்சியுடன் நடாத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி நிகழ்வு மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 37 வருடங்களுக்கு முன்னர் பிரபல அகில இலங்கை சைக்கிளோட்ட வீரராகவும் உதைபத்தாட்டம், நீச்சல் போட்டிகளில் சாதனை நிலைநாட்டிய வீரராகவும் மற்றும் கலைத்துறை படைப்பாளியாகவும் சிறந்த கலைஞனாகவும் சமூகப்பணியாளனகவும் பல்துறை ஆற்றலுள்ள மனிதராக வாழ்ந்து மறைந்த அமரர் அகஸ்ரின் அவர்களுடைய ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு ஆர்வலர்கள் இணைந்து மாபெரும் சைக்கிள் ஓட்ட போட்டி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தார்கள்.
வட்டக்கட்சி சந்தையில் ஆரம்பமாகிய எழுபது கிலோமீட்டர் தூரம் கொண்ட சைக்கிளோட்ட போட்டி நிகழ்வு முகமாலை வரை சென்று திரும்பி A9 வழியாக கிளநொச்சி விளையாட்டரங்கிற்கு முன்னதாக நிறைவு பெற்றது. இச்சைக்கிளோட்டப் போட்டியில் பல இளைய தலைமுறையினர் மூத்த சைக்கிளோட்ட வீரர்கள் சகிதம் உற்சாகத்துடன் முன்வந்து பங்குபற்றியிருந்தார்கள்.
தேசிய மட்டத்திலே இடம்பெறுகின்ற நிகழ்வை ஒத்தவகையிலே மிகவும் நேர்த்தியாக இவ்வொழுங்கமைப்பானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இப்போட்டியானது, விளையாட்டமைச்சின் தேசிய சைக்கிளோட்ட சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் பாதுகாப்பு காவல்துறையினரின் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு நோயாளர் காவுவண்டிகள் உள்ளடங்கலாக முழுமையான வாகன பேரணி இப்போட்டியில் ஈடுபட்டிருந்தமை முன்னுதாரணமான விடயமாக காணப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும்.
இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வுகள் கிளிநொச்சி விளையாட்டுமைதான உள்ளக அரங்கிலே நடைபெற்றது. அமரர் அகஸ்ரின் அவர்களுடைய சிரேஷ்ட புதல்வன் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளராக கடமையாற்றுகின்ற திரு. அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் அவர்களுடைய தலைமையில் இப்ப பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு போட்டியில் பங்கு பற்றிய வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கி மதிப்பளித்தார்.
மேலும் இப்போட்டி நிகழ்வில் அனுபவம் வாய்ந்த முதுபெரும் சைக்கிள் ஓட்ட வீரர்கள் இருவர் இப்போட்டியில் இளையதலைமுறையினரை ஊக்கமளிக்கும் வகையில் பங்குபற்றியிருந்தார்கள். அவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட அனுபவம் வாய்ந்த சைக்கிளோட்ட வீரர் திரு கைலைநாதன் அவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தின் மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக சைக்கிளோட்டபோட்டி நிகழ்வில் பங்கு பற்றிவரும் அனுபவம் வாய்ந்த திரு. எஸ். ஜி.கோபு அவர்களும் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக எதிர்காலத்தில் திகழ்வதற்காக அவர்கள் இந்நிகழ்வில் பரிசில் வழங்கி பிரதம விருந்தினர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர் என்பது சிறப்பு நிகழ்வாகும்.
அதேநேரம் அமரர் அகஸ்ரின் அவர்களுடன் சமகாலத்தில் சைக்கிளோட்டத்தில் பங்குபற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த திரு. ஸ்ரான்லி அவர்களும் வவுனியாவைச் சேர்ந்த திரு. சத்தியகாந்தி மற்றும் திரு. சுமதிபாலா அவர்களும் முல்லைத்தீவைச் சேர்ந்த திரு. துரைசிங்கம் அவர்களும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்கள்.
இப்போட்டி நிகழ்வில் பங்குபற்றி ஓட்ட தூரத்தினை நிறைவு செய்த அனைத்து வீரர்களுக்கும் பரிசல்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
மிக நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் கிளிநொச்சியில் நன்கு திட்டமிட்டவகையில் ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியில் நடாத்தப்பட்ட இச் சைக்கிளோட்ட போட்டி நிகழ்வானது பலரையும் ஈர்த்துள்ள நிலையில் எதிர்காலத்திலும் வருடந்தோறும் இச் சைக்கிளோட்டப்போட்டி நிகழ்வானது வடமாகாண மட்டத்தில் இன்னும் மேம்படுத்தப்பட்டு பல வயதுப் பிரிவினருக்குமாக நடாத்தப்படவுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
நிகழ்வுகளில் விளையாட்டு ஆர்வலர்கள் பொதுமக்கள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.