மஸ்கெலியாவில் சிறிய லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
மரண வீடொன்றின் இறுதிச் சடங்கில் பங்கேற்றத் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறியே விபத்துக்குள்ளானது என்று மஸ்கெலியா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பிரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் இடம்பெற்றது.
விபத்தில் சாரதி உட்பட 22 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஆண் ஒருவரும், நான்கு பெண்களும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாரதி உட்பட 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான மூவர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த சிறிய லொறியின் அளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்ற காரணத்தால் லொறி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது எனவும், விபத்தில் லொறி பலத்த சேதமடைந்துள்ளது எனவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.