வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இது தொடர்பில் வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.
இருப்பினும் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளளோம்.
இன்று முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தின்போது வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது.
மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும்.
அரசு எமது முன்மொழிவுகளினூடாக தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முன் வர வேண்டும். அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்க வைத்து இலவச சுகாதார சேவையைப் பேணுவதற்குத் தவறும் பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டி ஏற்படும்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.