குர்திஷ் போராளிகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது எமது எல்லைக்கு உட்பட்டதல்ல எனவும், குர்திஷ் போராளிகள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்லர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் குர்திஷ் போராளிகளின் சிரியா ஜனநாயகப் படை எங்களோடு சேர்ந்து சிறப்பாகப் போரிட்டார்கள்.
அதற்காக அவர்களுக்கு நிறையப் பணம் கொடுத்திருக்கிறோம். நம்மோடு சேர்ந்து போரிட்டபோது அவர்கள் சிறப்பாக போரிட்டார்கள். தனியாகப் போராடும்போது அவ்வளவு சிறப்பாகப் போரிடவில்லை.
துருக்கியில் தன்னாட்சிக்காக போராடிவரும் குர்துஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) பயங்கரவாதத்தில் ஐ.எஸ். அமைப்பை விடவும் மோசமானது’ எனவும் கூறியுள்ளார்.
சிரியாவில் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதற்காக வடக்குப் பகுதியில் இருந்த குர்திஷ் போராளிகளுடன் கைகோர்த்த அமெரிக்கா, தற்போது அங்கிருந்து வெளியேறும் முடிவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் குர்திஷ் போராளிகளின் தனிநாடு கோரிக்கையால் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறும் துருக்கி தற்போது குர்திஷ் போராளிகள் மீது போர் தொடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக தங்களுடன் இணைந்து போர் நடத்திய அமெரிக்கா உதவி செய்யும் என நினைத்திருந்த குர்திஷ் போராளிகளின் நம்பிக்கை ட்ரம்பின் கருத்தினால் தற்போது தகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.