திமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பரப்புரை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் பத்து கட்சிகள் அங்கம் வகித்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, கூட்டணியிலிருந்து விலகியது.
இந்நிலையில், எந்தெந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பது உள்ளிட்டவை குறித்து திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் இன்று இரவு 7 மணிக்கு அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.