இரண்டாம் கட்டமாக மக்களுக்கு வழங்க வேண்டியுள்ள 06 இலட்சம் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் உரிய நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனானுடன் நேற்றைய தினம் வீடியோ தொழில்நுட்பம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் இலங்கை மக்களுக்கு இரண்டாவது கட்டமாக வழங்குவதற்கான ஆறு லட்சம் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு உதவுவதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்காக உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிக்கான தேவை உள்ளதாகவும் ஜனாதிபதி அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் முதலாவது அலையை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றிகரமாக செய்யப்பட்டமைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அவசர நிலைமையில் உபயோகிப்பதற்காக சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது கையிருப்பிலுள்ள 06 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்க எடுக்கபட்டு வருகின்றது.