அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்
அமெரிக்காவில் சமீப காலமாக சைபர் தாக்குதல் மிக பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் அரசு துறைகள் மற்றும் பெருநிறுவனங்களை குறிவைத்து ‘சோலார்விண்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் எரிபொருளை வினியோகம் செய்யும் ‘தி கொலோனியல் ஆயில் பைப்லைன்’ நிறுவனம், இறைச்சி பதப்படுத்தும் ஜே.பி.எஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களால் அமெரிக்காவின் சில பகுதிகளில் எரிபொருள் மற்றும் உணவு வினியோகம்
பாதித்தன.அதன் பின்னர் கடந்த மே மாத இறுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா’ மீது ‘ரான்சம்வேர்’ தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படி அடுத்தடுத்து நடந்து வரும் சைபர் தாக்குதல்களால் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.
வல்லரசு நாட்டுடன் உண்மையான ஆயுத போர்
அமெரிக்காவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் இந்த சைபர் தாக்குதல்களுக்கு ரஷியாவை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இந்த நிலையில் அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல்களின் விளைவாக ஒரு வல்லரசு நாட்டுடன் போர் மூளும் அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அவர் எந்த ஒரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாத போதும் இது ரஷியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கபடுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.தலைநகர் வாஷிங்டனில் உள்ள தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற ஜோ பைடன் அங்கு உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் பேசியபோது இதனை தெரிவித்தார்.
அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையீடு
இதுபற்றி அவர் பேசுகையில் ‘‘நாம் ஒரு போர் முடிவுக்கு செல்ல நேர்ந்தால், ஒரு வல்லரசு நாட்டுடன் உண்மையான ஆயுத போர் ஏற்பட்டால் அதற்கு சைபர் தாக்குதலே காரணமாக இருக்க போகிறது. அது அதிவேகமாக வளர்ந்து வருகிறது” என கூறினார்.அதனை தொடர்ந்து அமெரிக்காவின் உளவு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன், அவர்கள் செய்யும் வேலையில் தனது நம்பிக்கையை வலியுறுத்தினார். மேலும் அவர்கள் மீது அரசியல் அழுத்தம் கொடுக்க மாட்டேன் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையில் 2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் ரஷியா தலையிட முயற்சிப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக ஜோ பைடன் குறிப்பிட்டார்.