புதுடெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பான வழக்கில், ஒன்றிய அரசு அபிடவிட் தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். கடந்த ஜூன் 30ம் தேதி அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது நிவாரணம் அளிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. தொற்றால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில் அவர்களின் இறப்புக்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிட்டு சான்றிதழ்களை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை எளிமையாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா கூறுகையில், ‘தொற்றால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் கடைசிக் கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளன. அந்த வழிகாட்டுதல்களை இறுதி செய்து நடைமுறைப்படுத்தும் முன்பாக அதுகுறித்து ஆழமாக ஆய்வு மேற்கொள்ள கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘நிவாரணம் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க ஒன்றிய அரசுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை, இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
அதன்படி, இவ்வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், எவ்வித வழிகாட்டுதல் தொடர்பான அபிடவிட்டும் தாக்கல் செய்யவில்லை. இதனை கண்டித்த நீதிமன்றம், மூன்றாவது அலை வரவாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் கூறிவரும் நிலையில், இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன்? வரும் 11ம் தேதிக்குள் தொற்றால் இறந்தவர்களுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் தொடர்பான விபரங்களை, வழிகாட்டுதல்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தது.