மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கி நாராயணபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அழகம்மாள். இவர்களது மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்த செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவரது பெற்றோர் தோட்ட வேலைக்கு சென்றனர். அப்போது வேதனையில் இருந்த நாகலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது வேதனையில் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும் உறவினர்களிடம் நாகலட்சுமி கூறியதாவது:–
எங்களை போன்ற ஏழை, மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கியதுடன் எங்களின் கல்வித் தரத்தை உயர்த்த நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருபவர் ஜெயலலிதா. அவரை சிறையில் அடைத்தது குறித்து தகவல் அறிந்தது முதல் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
தமிழக முதல்–அமைச்சருக்கு கிடைந்த இந்த தீர்ப்பை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்தேன். எனக்கு மனவேதனை அதிகமானதால்தான் இந்த முடிவுக்கு வந்தேன். எனது ஊயிர் போனாலும் பரவாயில்லை. ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். இதுதான் எனது ஒரே ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.