உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,272யை தாண்டியுள்ளது. இலங்கையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51யை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள சவர்க்காரம் கொண்டு கைகளை சுத்தம் செய்வது சிறந்த வழியாக இருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.
கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் கடும் போராட்டத்திற்கு பிறகு கொரோனோ கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இலங்கை உட்பட பல உலக நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் ஆட்டம் அதிகரித்தே செல்கிறது. இதனால் செய்வதறியாமல் பலநாடுகளும் தவித்து நிற்கின்றன. பல நாடுகளும் மக்களை தனிமைப்படுத்தி வைக்கும் நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.
கொரோனாவிலிருந்து தப்பிக்க கைகளை சுத்தமாக கழுவி வைத்து கொள்வதே முக்கியம் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், உலகம் முழுவதும் ஹேண்ட் சனிட்டைஸர்களுக்கு ( Hand Sanitizer ) கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளிலும் Hand Sanitizerகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸைக் கொல்ல சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியான காரணம் உள்ளதாக கூறுகின்றனர் வைத்தியர்கள்.
கொரோனா தாக்காமல் தற்காத்து கொள்ள Hand Sanitizerகளை விட, சாதாரண சவர்க்காரம் நல்ல பலன்களை தரும் என கூறப்பட்டுள்ளது. உலகின் முன்னனி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை ( Johns Hopkins University ) சேர்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான கரேன் பிளெமிங் கூறுகையில்:-
கொரோனோவிற்கு எதிரான ஒரு அற்புதமான ஆயுதத்தை நாம் அனைவரும் நம் வீடுகளிலேயே வைத்திருக்கிறோம். அந்த அற்புத ஆயுதம் சவர்க்காரம்தான் என கூறியுள்ளார்.
அல்கஹோல் அடிப்படையிலான சானிட்டைசர்கள் பயனுள்ளவை தான். ஆனால் சவர்க்காரம் போட்டு கைகளை கழுவுவது வைரஸைக் கொல்ல மிகவும் சிறந்த வழி என இந்தியாவின் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அதற்கான விஞ்ஞான ரீதியான காரணத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஒரு உறையால் மூடப்பட்டுள்ளது. அதாவது oily lipid membrane எனப்படும் எண்ணெய் கொழுப்புகள் நிறைந்த வெளிப்புற சவ்வால் கொரோனா வைரஸ் சூழப்பட்டுள்ளது. இந்த சவ்வில் புரோட்டனிஸ் எனப்படும் பெரிய உயிர் அணுக்கள் அல்லது மேக்ரோ மூலக்கூறுகள் உள்ளன. இவை வைரஸ் செல்களுக்குள் நுழைய உதவுகிறது. எனினும் இந்த கொடிய கொரோனா பலவீனமான இணைப்பைக் கொண்ட self assembled நானோ துகள் என்று கூறியுள்ளனர் வைத்தியர்கள். எனவே சாதாரண சவர்க்காரங்களை கொண்டு தண்ணீரை வேகமாக திறந்து விட்டு இரு கைகளையும் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழுவினாலே, கொரோனா வைரசின் மேற்புறம் உள்ள கொழுப்பு அடுக்குகளும், வைரஸும் சேர்ந்தே அழிக்கப்பட்டு விடும்.