ஜக் கலீஸ், சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் துடுப்பாட்டத்தை ரசித்து பார்ப்பேன் என்று கிரிக்கெட் நடுவர் இயன் குட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் நடுவர் இயன் குட். ஐ.சி.சி.யின் நடுவராக பணியாற்றிய இவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் பார்த்த வகையில் ஜக் கலீஸ் (தென் ஆபிரிக்கா) சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), விராட் கோலி (இந்தியா) ஆகிய 3 பேர் தான் சிறந்த துடுப்பாட்டவீரர்கள். ஜக் கலீசின் துடுப்பாட்டத்தை பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மிக மிக சிறந்த வீரர் ஆவார்.
தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அபாரமாக ஆடுபவர்கள். எனவே இந்த மூன்று பேரின் துடுப்பாட்டமும் எனக்கு பிடித்தமான ஒன்றாகும்.
விராட் கோலி ஒரு வேடிக்கையான மனிதர். அவர் என்னைபோல் ஓரிரு முறை துடுப்பாட்டம் செய்திருக்கிறார். அவர் ஒரு கவர்ச்சிகரமானவர். தெண்டுல்கரின் துடுப்பாட்ட சாயல் அவரிடம் இருக்கிறது. தெண்டுல்கரை போலவே அவருக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
ரிக்கி பொண்டிங்கின் (அவுஸ்திரேலியா) மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் அருமையான வீரர். மிகச்சிறந்த அணியின் தலைவர்.அவுஸ்திரேலியாவுக்கு அவர் பெருமைச் சேர்த்துள்ளார்.
இயன்குட் 74 டெஸ்ட், 170 ஒருநாள் போட்டி மற்றும் 37 இருபது ஓவர் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இவரது நடுவர் பணி அனைவராலும் பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. இவர் இங்கிலாந்து அணிக்காக 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.