ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் போட்டி அபுதாபியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர் எதிர்கொண்டது.
நாணய சுழற்சியை வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக தலைவர் ரோகித் சர்மா 80 ஓட்டங்கள் குவித்தார்.
கொல்கத்தா அணியின் ஷிவம் மாவி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் 7 ஓட்டங்களிலும், சுனில் நரைன் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 30 ஓட்டங்களிலும், நிதிஷ் ரானா 24 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மேலும், எஞ்சிய கொல்கத்தா வீரர்களும் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய கம்மின்ஸ் அதிகபட்சமாக 12 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 33 ஓட்டங்கள் குவித்து பேட்டிசன் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆனால், மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டுக்கான தங்கள் அணியின் முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்தது.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா கைப்பற்றினார்.