இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இடைவேளைக்கு பிறகு மழைக்குறுக்கிட்டதால், இன்றைய நாள் முடிவடைவதற்கு 35 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில் அஜிங்கியா ரஹானே 2 ஓட்டங்களுடனும் புஜாரா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி 307 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 369 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேகன் 108 ஓட்டங்களையும் டிம் பெய்ன் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், நடராஜன், சர்துல் தாகூர் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதில் ரோஹித் சர்மா 44 ஓட்டங்களையும் சுப்மான் கில் 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளில், இந்தியா அணி, நாளை துடுப்பெடுத்தாடவுள்ளது.