யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் – இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வு மாநாடு இன்று காலை இடம்பெற்றது.
“பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளிடையே வழமைக்கு திரும்புதலும் மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புதலும்” (Restoring Normalcy and Building Resilience amidst a Pandemic and an Economic Crisis) எனும் தொனிப் பொருளில், கலைப் பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலமையில் இடம்பெற்ற இந்த ஆய்வு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கொழும்புப் பல்கலைக்கழகப் பொருளியல்துறைப் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் ‘இலங்கையின் தற்போதய பொருளாதார நெருக்கடி’ எனும் கருப்பொருளில் திறவுரையாற்றினார்.
இந்த ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களால் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலமைந்த சுமார் 125 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
வரலாறு மற்றும் பண்பாட்டு மேம்பாடு, அனர்த்த முகாமைத்துவம், தொல்லியல் மற்றும் பண்பாட்டு பல்வகைமை, உணவும் போசாக்கும், வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை, மனித உரிமைசார் பிரச்சினைகள், ஊடகமும் சமூகமும், ஒழுக்கவியலும் மானிட வாழ்வும், மொழி, இலக்கியம், மற்றும் மொழிபெயர்ப்பு, பால்நிலையும் மேம்பாடும், இனத்துவமும் மோதல் தீர்வும், சுகாதாரமும் நல்வாழ்வும், சமூக-பொருளாதார சமத்துவமின்மையும் நீதியும், நல்லிணக்கமும் நிலைமாறு கால நீதியும், பொருளாதார நெருக்கடியும் இலங்கைச் சமூகமும், சட்டமும் ஒழுங்கும், சமகால சமூகத்தில் சமயம், கோவிட் – 19 பெருந் தொற்றும் இலங்கைச் சமூகமும், வேறுபட்ட பண்பாடுகளில் அழகியல், சமூக மாற்றமும் சமகால சமூக பிரச்சினைகளும், சமுதாய தாங்குதிறன், சமுதாய மேம்பாடும் பிராந்தியத் திட்டமிடலும், கல்வியும் சமூகமும், மற்றும் காலநிலை மாற்றமும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளும் எனப் பல்வேறு உப தலைப்புக்களை அடியொற்றி – எட்டு ஆய்வுத் தடங்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.