நியூயார்க் காவல்துறையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் புதுடெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக கடந்த மார்ச் 11 ம் தேதி அமெரிக்க போலீஸ் அதிகாரியான மேனி என்கார்னேசியன் (49) புதுடெல்லிக்கு வந்தார்.
அப்போது விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் என்கார்னேசனின் பையில் 3 துப்பாக்கி குண்டுகள் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்துஇ அவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதால் நாட்டை விட்டு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் என்கானேசனுக்கு உதவுவதற்காக அவரை சந்தித்தனர்.
என்கார்னேசன் தவறுதலாக மறந்து துப்பாக்கி குண்டுகளை பையில் விட்டுவிட்டதாகவும், இந்தியாவில் இருக்கும் ஈரான் நாட்டு மாணவியை புதிதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அவரை பார்ப்பதற்காகவே இந்தியா வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து நியூயார்க்கின் மேயர் பில் டி பிளேசியோ நேற்று கூறுகையில், தன் நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டது தனக்கு வருத்தமளிப்பதாகவும், இந்திய அதிகாரிகளால் என்கார்னேசன் நேர்மையாக நடத்தப்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.