செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை செலுத்தியது. கடந்த 7 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் 70 சதவீதம் தூரத்தை கடந்துவிட்டது.
இன்னும் 30 சதவீத தூரத்தையும் கடந்து இன்னும் 100 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதம் 24–ந்தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேர உள்ளது. இந்த இலக்கை எளிதில் எட்டுவதற்காக புதிய என்ஜின்கள் இயக்கப்பட்டு மங்கள்யானின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு முக்கியமான போக்குத் திருத்தம் ஆகஸ்டு மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மங்கள்யான் தனது இலக்கை எட்டும் செப்டம்பர் 24-ம் நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல் கல்லாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மங்கள்யானும் அதன் ஐந்து பேலோடுகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இப்போது மங்கள்யானில் இருந்து வரும் சிக்னல் 6 நிமிடங்களில் பூமிக்கு கிடைக்கிறது.