அமெரிக்க புகைப்பட பத்திரிகையாளரான லூக் சோமர்ஸ் (வயது 33), ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். இதே போன்று தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆசிரியர் பியரே கொர்கி என்பவரும் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்டார்.
3 நாளில் அமெரிக்கா கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிணைக்கைதிகளை கொலை செய்யப்போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன்பு மிரட்டல் வீடியோ வெளியிட்டிருந்தனர். நேற்று கெடு முடியும் நாள் ஆகும்.
ஏமனில், ஷாப்வா பகுதியில் அவர்களை மீட்கும் முயற்சியில் தாக்குதல் தொடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஏமன் தனிப்படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. ஆனால் இந்த மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது.
லூக் சோமர்ஸ், பியரே கொர்கி ஆகிய இருவரையும் அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்து விட்டனர். இந்த படுகொலைக்கு ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இது கொடூரக் கொலை” என கூறினார்.
தென் ஆப்பிரிக்க ஆசிரியர் பியரே கொர்கியை அவரது மனைவி யோலண்டேயுடன்தான் கடந்த ஆண்டு மே மாதம் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர். ஆனால் யோலண்டேயை சென்ற ஜனவரி மாதம் விடுவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.