இலங்கைத் தமிழர்களுடனான அந்த நாட்டு அரசின் சமரசத் தீர்வு முயற்சிகளை விரைவுப்படுத்தும் வகையில், பெரிய அளவில் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று ஐ.நா. தெரிவித்தது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் புதன்கிழமை தெரிவித்ததாவது: இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட போருக்கு பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுவது தொடர்பான தனது செயல் திட்டத்தை, ஐ.நா. கடந்த ஜூன் மாதம் அந்த நாட்டு அரசிடம் அளித்தது.
அதன்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களை, மீண்டும் அந்தப் பகுதிகளில் மறுகுடியமர்த்துவது போன்ற நடவடிக்கைகளுக்காக ஐ.நா. ஏற்கெனவே ரூ.6.37 கோடி நிதி அளித்துள்ளது.
தற்போது இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைத் தமிழர்களுடனான அதன் சமரசத் தீர்வு முயற்சிகளை துரிதப்படுத்தும் வகையில், பெரிய அளவில் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவி அளிப்பது குறித்து, ஐ.நா.வின் முக்கிய உறுப்பு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இலங்கைத் தமிழர்களுடனான அந்த நாட்டு அரசின் சமரசத் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உண்மையான, ஒருங்கிணைந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. நம்புகிறது என்று ஸ்டீபன் துஜாரீக் தெரிவித்தார்.
0