பங்களாதேஷில் 2024இல் நடைபெறவுள்ள 9ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெற இலங்கை தவறியுள்ளது.
தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 1ஆம் குழுவில் இடம்பெற்ற இலங்கை நிகர ஓட்ட வேக அடிப்படையில் 4ஆம் இடத்தையே பெற்றது.
இதன் காரணமாகவே 9ஆவது மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெற இலங்கை தவறியது.
நடந்து முடிந்த மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற 6 அணிகள் 2024 மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாடத் தகுதிபெற்றுக்கொண்டன.
ஆறாவது தடவையாக உலக சம்பியனான அவுஸ்திரேலியா, 2ஆம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்கா, 3ஆம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்து ஆகிய நாடுகள் குழு 1இலிருந்தும் இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் குழு 2இலிருந்தும் அடுத்த மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.
2024இல் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள வரவேற்பு நாடு என்ற வகையில் பங்களாதேஷும் மகளிர் இருபது 20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் அடுத்த சிறந்த நிலையான 7ஆம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானும் நேரடி தகுதியைப் பெறும் மற்றைய 2 நாடுகளாகும்.
எட்டாவது மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் குழு 1இல் இலங்கையும் குழு 2இல் அயர்லாந்தும் கடைசி இடங்களைப் பெற்றதால் அடுத்த அத்தியாயத்திற்கான தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.
மகளிர் இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை 8ஆம் இடத்திலும் அயர்லாந்து 10ஆம் இடத்திலும் இருக்கின்றன. பங்களாதேஷ் 9ஆம் இடத்தில் இருக்கிறது.
ஒன்பதாவது மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கான உலக தகுதிகாண் சுற்று 2024ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. அதற்கான திகதிகள் ஐசிசியினால் விரைவில் அறிவிக்கப்படும்.