இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் காஸாவின் பல மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் (generator) கருவிகளை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் தீர்ந்துவிட்டது.
இதனால் காஸாவில் புதிதாகப் பிறந்த 120 குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
அந்தக் குழந்தைகள் தற்போது incubator எனும் அடைக்காப்புக் கருவியில் வைக்கப்பட்டுள்ளன.
அதில் 70 குழந்தைகளுக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த நிலை தொடர்ந்தால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று UNICEF கவலை தெரிவித்துள்ளது.
நோயாளிகள் அவதி
இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான சண்டையில் இதுவரை 1,700க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு AFP செய்தியிடம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல நோயாளிகளும் எரிபொருள், தண்ணீர் ஆகியவை இன்றி அவதியுற்று வருகின்றனர்.
ஜெனரேட்டர் கருவிகள் இயங்கவில்லை என்றால் இரத்த சுத்திகரிப்புச் சிகிச்சை பெறுபவர்களில் சுமார் 1,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்கு அனுமதி இல்லை
முதல்முறையாகக் காஸாவுக்குள் ஒக்டோபர் 21 அன்று நிவாரண உதவிப் பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டன. எனினும், எரிபொருளைக் கொண்டுசெல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.
எரிபொருள் அனுப்பினால் அது ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கு உதவும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது.
காஸாவில் அதிக கர்ப்பிணிகள்
காஸாவில் நாளொன்றுக்கு சுமார் 160 பெண்களுக்குக் குழந்தை பிறப்பதாக ஐ.நா மக்கள்தொகை நிதியம் கூறுகிறது. 2.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காஸா வட்டாரத்தில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் உள்ளனர்.