கேரளாவின் மூணாறு தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில் கடந்த 7ஆம் திகதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.
இதனையடுத்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், பொலிஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 56 பேர் இறந்த நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 10ஆவது நாளாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இதுகுறித்து இடுக்கி மாவட்ட தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல்போன 12 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.