என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அயனாவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி சங்கர். இவரை பிடித்து விசாரணை செய்ய போலீசார் இன்று அதிகாலை சென்றுள்ளனர்.
அப்போது சங்கர் தன் கையில் வைத்திருந்த ஆயுதத்தைக்கொண்டு காவலர் முபாரக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தற்காப்புக்காக அவரை சுட்டதாகவும், அதில் அவர் பலியானதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காயமடைந்த காவலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரம் என்கவுண்டர் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன, 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். என்கவுண்டர் குறித்து நீதி விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவலரை வெட்டிய ரவுடி சங்கரை போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.