ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கவுள்ளது.
தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்த இந்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.
மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும்.
இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தது.
இதற்கிடையே, இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயற்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு கூறியது. வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.