அயோத்தியில் அமையவுள்ள பாபர் மசூதியின் மாதிரி படங்களை இந்திய இஸ்லாமிய கலாசார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி தீர்ப்பளித்தது.
அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு வழங்கி நீதிமன்று உத்தரவிட்டது.
அத்துடன் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது. இதற்கான அடிக்கல் ஜனவரி 26ல் நாட்டப்படுகிறது.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்டமாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படங்களை இந்திய இஸ்லாமிய கலாசார அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் மசூதியின் பின்பகுதியில் மருத்துவமனை இடம்பெறும் வகையில் மாதிரி படம் வெளியாகியுள்ளது. சூரிய மின்சக்தி வசதியையும் இயற்கை வெப்ப நிலை பராமரிப்பு முறையையும் கொண்டதாக அமைகிறது.
இந்த வரைபடங்களை தலைமை கட்டட கலைஞர் எஸ்.எம். அக்தர் இறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.