புதுடெல்லி: ‘இந்திய ராணுவத்திற்கான ஆயுதம், தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் தெரிவித்துள்ளோம்’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஆண்டு மாநாட்டில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சில அண்டை நாடுகளை கடவுள் கொடுத்துள்ளார். பிரிவினையால் பிறந்தவர்கள், இந்தியாவின் வளர்ச்சியை கண்டு கவலை கொள்கின்றனர்.
இந்த சூழலில் எண்ணற்ற பாதுகாப்பு சவால்களை சமாளிக்க வேண்டியிருப்பதால், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய விரும்புகிறோம். இந்த விஷயத்தை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பல கூட்டாளி நாடுகளிடமும் இந்தியா மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் உடனான சமீபத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பிரான்ஸ் நிறுவனம் ஒன்று இந்தியாவில் இந்திய நிறுவனத்துடன் இணைந்து ஓர் இயந்திரத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
உள்நாட்டு ராணுவ தொழில்துறையை ஊக்குவிக்க அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி சந்தையின் மதிப்பு ரூ.85,000 கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டில் இது ரூ.1 லட்சம் கோடியை எட்டும். இதுவரை 209 ராணுவ உபகரணங்கள் இறக்குமதி தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. விரைவில் இப்பட்டியல் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும்.இவ்வாறு அவர் கூறினார்.
வைரஸ்களை எதிர்த்து போராட புதிய ஆய்வகம்
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஇ) ஆபத்தான வைரஸ்களை எதிர்த்து போராடுவதற்கு மேம்பட்ட உயிரி பாதுகாப்பு ஆய்வகம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இது குறித்து டிஆர்டிஓ இயக்குநர் மன்மோகன் பரிதா கூறுகையில், ‘‘ஏற்கனவே அணுசக்தி மற்றும் ரசாயன போரை தடுக்க, ராணுவத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களை டிஆர்டிஇ உருவாக்கி வருகிறது. இதோடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் நுட்பங்களின் உதவியுடன் ஆபத்தான வைரஸ் தாக்குதல்களை உடனடியாக தடுக்கும் வழிகளை உருவாக்க புதிய ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில், ஆபத்தான வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கான பாதுகாப்பு மற்றும் உபகரணங்களை உருவாக்கும்,’’ என்றார்.