0
‘தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை தீர்வு கிடைக்க வேண்டும், இல்லையேல் நான் இறக்க வேண்டும்’ என தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு.
ஆதனவரியை குறைக்க கோரி கிளிநொச்சி நகரில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வரும் வர்த்தகரை இன்று காலை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பு சுமார் பதினைந்து நிமிடம் இடம்பெற்றது. இதன் போது தவிசாளரால் ஆதனவரி தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன் உங்கள் கோரிக்கையை மதிக்கின்றோம். ஆனால் இது ஒரு அரச கடமை நான் தவிசாளர் என்ற வகையில் தன்னிச்சையாக எதனையும் செய்ய முடியாது. வரி செலுத்துகின்ற பல ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள். அதில் எதிர்ப்பது நீங்கள் மட்டுமே அதனால் இது தொடர்பில் ஆராய வேண்டும். சபை தீர்மானம் எடுக்க வேண்டும். மீண்டும் வர்த்தமானப் படுத்த வேண்டும். ஆகவே இது ஒரு நீண்ட செயல்திட்டம்.
அதுமட்டுமல்லாது வரி குறைப்பு தொடர்பாக நாம் பரிசீலனை செய்து வருகின்றோம். பொது மக்களுடன் கலந்தாலோசித்து வருகின்றோம். கடந்த சபை அமர்வில் இது தொடர்பில் அறுபது நாட்களுக்குள் ஆராய தீர்மானம் எடுத்துள்ளோம். ஆனால் இவ்வருடத்திற்கு அது சாத்தியப்பாடாக இருக்குமா என்பது கேள்விக்குறியே ஏன் எனில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டப்வர்கள் ஆதனவரியை செலுத்தி விட்டார்கள் எனவே அவர்கள் தொடர்பிலும் நாம் அக்கறையாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கக் கூடாது என்பதிலும் அதிகம் கவனம் செலுத்துகின்றோம்.
அதனால் அடுத்த வருடம் குறைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னேடுக்கின்றோம் . குறித்த தீர்மானத்தை ஆறாம் மாதத்திற்குள் சபைக்கு சமர்ப்பித்து சாதனமான தீர்வை வழங்குகின்றேன். சபையும் உங்களுக்கு சாதகமான பதிலை சபை வழங்கும் என நம்புகின்றேன். அவ்வாறு முன்னெடுக்காவிடில் நீங்கள் போராட்டத்தை தொடருங்கள் இப்பொழுது கைவிடுங்கள். அதுமட்டுமல்லாது குறைப்பு தொடர்பான செயல்த்திட்டத்தை முன்னெடுக்கும் போது பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களின் அபிவிருத்தி தொடர்பில் அவர்கள் பாதிக்காத வகையில்தான் தீர்மானங்களை எடுப்போம். என தவிசாளர் வேழமாலிதன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் போதே குறித்த வர்த்தகர் ‘தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை தீர்வு கிடைக்க வேண்டும், இல்லையேல் நான் இறக்க வேண்டும்’என தெரிவித்துள்ளார்.