கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயாவில் தோட்டதுரைக்கும் பெண் தொழிலாளர்கள் சிலருக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியதால் தோட்டதுரையும், பெண் தொழிலாளி ஒருவரும் காயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழை காரணமாக மேற்படி தோட்டத்தில் வீடுகள் இடிபாடுகளுடன் காணப்படுவது குறித்து தோட்ட துரைக்கு தோட்டத்தொழிலாளர்கள் விளக்கிக்கொண்டிருக்கையில், துரை அசட்டைத்தனமாக செயற்பட்டுள்ளார். அத்துடன், தகாத வார்த்தைப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளார்.
இதனால் தொழிலாளர்களுக்கும் துரைக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண் தொழிலாளி ஒருவரை துரை தாக்கியுள்ளார் எனவும், பதிலுக்கு துரையும் தாக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தோட்டதுரைக்கும், பெண்தொழிலாளி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக்காக கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மஸ்கன்ஸ் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தோட்டத்துரைக்கு இடமாற்ற கடிதம் அனுப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநில அமைப்பாளர் சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.