எமது அரசியல் செயற்பாட்டிற்கு அரசு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதனால் வடக்கு- கிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.
அம்பாறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சுமந்திரன், பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இவ்விடயம் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கமானது எமது அரசியல் எதிர்ப்பினை அடக்குவதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான தடைகள், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்காகவே வட.கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பதற்கு கோரப்பட்டுள்ளது. முழுமையாக ஹர்த்தாலை அனுஸ்டிப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
இதேவேளை கடந்த காலங்களில் 19 ஆவது சீர்த்திருத்த சட்டத்தில் குறைகள் இருந்ததை நாம் அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கும் தயாராக இருந்தோம்.
ஆனால் இச்சட்டத்தை முழுமையாக இல்லாமல் பண்ணுவது என்பது பழைய நிலைக்கு செல்வது போன்றதாகும். அதாவது 18 ஆவது சீர்திருத்தத்திற்கு மீண்டும் செல்வது என்பது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
ஆகையால்தான் புதிய 20ஆவது சீர்திருத்த சட்டத்தை எதிர்க்கவுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.