அதிபர் – ஆசிரியர்கள் குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும்போது 9.5 வீதமாக இருந்த வட்டியை 15.5 வீதம் வரை அதிகரிக்க எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் (டிச. 31) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது தெரிவித்துள்ளார்.
அதிபர்களும் ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில், அரச வங்கிகள் மூலம் குருசெத்த கடன் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள குருசெத்த கடனுக்கான வட்டியை அதிகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் எதுவும் அதிகரிக்கப்படவில்லை.
எனினும், அரசாங்க ஊழியர்களின் இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தின்படி, கடனுக்கான வட்டியை உயர்த்துவது பாரிய அநீதியாகும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், கடன் பெறும்போது அதிகூடிய அறவீடு செய்யக்கூடிய தொகைக்கே கடன் வழங்கப்படும். எனினும், தற்போது வட்டி அதிகரிப்பினால் மாதாந்தம் அறவீடு செய்யப்படும் கடனுக்கான அறவீட்டுத் தொகை அதிகரிப்பினால் கடனாளியின் மாதாந்தம் அறவீடு செய்யக்கூடிய தொகைக்கும் பார்க்க அதிகூடிய தொகை அறவீடு செய்யப்படுவதனால், சம்பளத்தில் அதிகபட்ச அறவீடு செய்யும் நிபந்தனையை மீறும் செயலாக இது காணப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிதி அமைச்சு, மத்திய வங்கி, அரசியல் அதிகாரங்கள் உடைய பொது நிதி முகாமைத்துவத்துக்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் நிதி முறைகேடுகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அரச ஊழியர்கள் மற்றும் மக்கள் தோள்களில் சுமத்திச் செல்லும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளை தொழிற்சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
இந்த அரசாங்கம் அதிபர், ஆசிரியர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக, கஷ்டங்களை வழங்குவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.