“தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடிய வகையில் செயற்படுவதை சிங்கள பௌத்தர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெற்கில் அனுபவிக்கும் சுதந்திரத்தை தாம் வடக்கில் அனுபவிப்பதற்கு இடமளிக்கவேண்டுமென வலியுறுத்தி பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர், அவரது கொழும்பு இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.,
“எமது செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.
அதேபோன்று தமது கருத்துக்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை சகலருக்கும் உண்டு. அதனை நாம் மறுதலிக்கவில்லை. அதேவேளை, நாம் ஒருபோதும் சிங்கள பௌத்தர்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீண்டகாலமாக மத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த விகாரைகளை அப்புறப்படுத்துமாறு நாம் கோரவில்லை.
மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடிய வகையிலும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக் கூடிய வகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையே நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
தொல்பொருள் சின்னம் அல்லது பௌத்த சின்னம் என்ற பெயரில் தமிழ்மக்களின் அடையாளங்களையும் சரித்திரத்தையும் அழிப்பதற்கோ அல்லது மாற்றியமைப்பதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதனை முன்னிறுத்தியே நாம் செயற்பட்டு வருகின்றோம்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.