வெளியுறவு செயலாளர் டொமினிக் ராபின் மெய்க்காப்பாளர், ஹீத்ரோவில் விமானத்தில் தனது துப்பாக்கியை விட்டுச் சென்றதாகக் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
யுனைடெட் எயார்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை லண்டனில் தரையிறங்கிய பின்னர், விமானத்தில் இருந்து ஒரு துப்பரவு பணியாளர் ‘க்ளோக் 19’ கைத்துப்பாக்கியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
துப்பரவு பணியாளர் கைத்துப்பாக்கியைக் கண்டுபிடித்த பின்னர், எச்சரிக்கை மணியை அழுத்தினார். இதனைத் தொடர்ந்து விமானத்திற்குள் நுழைந்த அதிகாரிகள், கைத்துப்பாக்கியை கைப்பற்றினர்.
இதுகுறித்து பெருநகர பொலிஸ்துறை அதிகாரியொருவர் கூறுகையில், ‘செப்டம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் ஒரு விமானத்தில் நடந்த சம்பவம் எங்களுக்குத் தெரியும். நாங்கள் இந்த விடயத்தை மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரி பின்னர் செயற்பாட்டு கடமைகளில் இருந்து நீக்கப்பட்டார். அதே நேரத்தில் சூழ்நிலைகள் குறித்து உள் விசாரணை நடைபெறுகிறது’ என கூறினார்.
பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அரசியல்வாதிகளுடன் பேச வெளியுறவு செயலாளர் வொஷிங்டன் டி.சி.யில் இருந்தார்.