பிறந்த குழந்தையின் செவித்திறனை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த இந்திய பெண்ணுக்கு சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான பிரிட்டனின் “ரோலக்ஸ்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளின் கேட்கும் திறனில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க உதவும் கருவியை இந்தியாவைச் சேர்ந்த நீத்தி கைலாஸ் உருவாக்கியுள்ளார். இந்த கருவியானது குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய, எளிதில் உபயோகப்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செவித்திறன் குறைபாடுடைய 1 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பதற்கும், சரிசெய்வதற்கும் அதிக அளவில் பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
ரோலக்ஸ் விருதானது கடந்த 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மனித வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் உலகின் இயற்கை வளத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் 33,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டுக்கான இந்த விருது நீத்தி கைலாஸ் தவிர மேலும் 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.