லூயி கிளைக் ஒரு அமெரிக்க பெண் கவிஞர். 77 வயதாகும் இவர் இவ்வருடத்திற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். பழைய படங்களில் வாணிஶ்ரீயின் சாயல் இருக்கிறது. நான் இவரை அதிகம் படித்திருக்கவில்லை. செய்தி கேள்விப்பட்டதும் இவரது மொத்தத் தொகுப்பை (Louis Gluck: Poem 1962 – 2012 ) தரவிறக்கி சுவாரஸ்யமாய் பட்ட தலைப்பிலான கவிதைகளை முதலில் படித்தேன். கணிசமான கவிதைகள் சிறியவை.
பின்நவீன தாக்கம் ஆச்சரியமாக இல்லவே இல்லை. கச்சிதமான நவீனத்துவ கவிதைகள். கராறான வடிவ ஒழுங்கை கொண்டவை. அனேகமாய் எல்லா கவிதைகளிலும் மரணம் வந்து போகிறது. குழந்தைகளைப் பற்றி அதிர்ச்சிகரமான சித்திரங்களை அடிக்கடி உருவாக்குகிறார் – குறிப்பாய் இறந்து போகும் குழந்தைகள். இதற்காக இவர் விமர்சனத்துக்கு உள்ளாகினாலும், குழந்தைகளை அதிர்ச்சிகரமாய் சித்தரிப்பதை விட மரணத்தை தழுவும் குழந்தைகளிடத்தும், பிறக்கும் மதலைகளித்தும் ‘தன்னை வைத்துப் பார்ப்பதையே’ இவர் விரும்புகிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.
மரணமுறும் அல்லது மரணத்தின் விளிம்பில் இருந்து வாழ்வுக்கு நகர்ந்து வரும் குழந்தைகளிடம் ஒரு சன்னமான பலவீனமான இருப்பு உள்ளது, தொட்டால் உடைந்து போகும் குமிழ்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள். குழந்தைமை என்பதே காலத்தின் இன்மையை, காலமற்ற நிலையை நோக்கிய இறைஞ்சலாக அவர் பார்க்கிறார் என நினைக்கிறேன். இது வழக்கமான ரொமாண்டிஸ பார்வைக்கு நேரெதினாது (ரொமாண்டிஸ கவிஞர்கள் குழந்தைமையை களங்கமின்மையின், தூய்மையின், பாவங்கள் தீண்டாத நிலையின் உருவகமாகக் கண்டார்கள்).
கிளைக்கை முதலில் படிக்கும் போது இவரெல்லாம் ஒரு பெரிய கவிஞரா எனும் எண்ணம் ஏற்படும் – ஏனென்றால் ஒரு வசீகரமான மொழியோ ஸ்டைலோ, வித்தியாசமான ஆளுமையோ இவரிடம் இல்லை. மிக மிக சன்னமாய், துண்டுத்துண்டாய் எழுதுகிறார். உணர்ச்சிகரமான நாடகீயமான எழுத்துநடை இல்லை. ஆனால் கவனித்து படித்தால், பல கவிதைகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்த்தால் ஒரு உக்கிரமான தீவிரமான கவிஞர் இவர் எனத் தோன்றுகிறது – குறிப்பாக இருப்பு, மரணம் குறித்த இவரது கவிதைகள் முக்கியமானவை.
இவர் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை – நோபல் கிடைத்தவர்கள் எல்லாரும் நமக்குப் பிடித்தவர்கள் அல்லரே. நோபல் கிடைக்காதவர்களை நாம் நிராகரிக்கிறோமா என்ன? எத்தனையோ பரிசுகளைப் போல இதுவும் என்றே நான் பார்க்கிறேன்; எல்லா கவிஞர்களுக்கும் இப்படி உலகமே (அல்லது ஒரு மாநிலமோ ஊரோ தெருவோ) திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம் அமையும் – அப்போது அவர்களைப் படிக்கவும் பேசவும் செய்ய வேண்டும். இது லூயி கிளைக்குக்கான வேளை. அவரையும் பொருட்படுத்தி வாசிக்கையில் ஒரு புதிய உலகம் நமக்கு வசமாகிறது.
லூயி கிளைக்கின் கவிதைகள் அறுபதுகளின் பின்னமைப்பியல் பெண்ணியக் கவிதைகளில் இருந்து எவ்வளவு விலகி இருக்கின்றன என்பதே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சில்வியா பிளாத்தின் கவிதைகளுக்கு சற்று நெருக்கமாய் உள்ளன (பிளாத் அளவுக்கு உரக்கப் பேசும் இயல்பு இவருக்கு இல்லையெனிலும்). அதனாலே தமிழ் பெண்ணிய கவிஞர்களிடம் இருந்து இவரது கவிதைகள் நெடுந்தொலைவு விலகித் தெரிகின்றன.
தமிழில் கலாப்ரியாவின் கவிதைகளை ஆச்சரியமாய் இவை ஒத்துள்ளன – கலாப்ரியாவின் கவிதை ஒன்றை எடுத்து மரணத்தை ஒரு டோஸ் கலந்தால் கிளைக்கின் கவிதை வந்து விடும். அத்தோடு கொஞ்சம் நாடகீயமான தருணங்களை கலந்தால் போகன் சங்கரின் கவிதை வந்துவிடும் (அவருக்கு இக்கவிதைகள் பிடிக்கும் என கணிக்கிறேன்.) சுருக்கமாய், கிளைக் ஒரு ‘அமெரிக்க கலாப்ரியா’
உங்கள் வாசிப்புக்காக எனக்குப் பிடித்த கிளைக்கின் கவிதைகளில் சிலவற்றை மொழியாக்கியிருக்கிறேன். இங்கு இரண்டைத் தருகிறேன் – இக்கவிதைகளில் என்னைக் கவர்ந்தது அவர் எப்படி மரணத்தை ஒரு பின்னோக்கிய பயணமாக உருவகிக்கிறார் என்பது.
“COTTONMOUTH COUNTRY
Fish bones walked the waves off Hatteras.
And there were other signs
That Death wooed us, by water, wooed us
By land: among the pines
An uncurled cottonmouth that rolled on moss
Reared in the polluted air.
Birth, not death, is the hard loss.
I know. I also left a skin there.”
விரியன் பாம்புகளின் தேசம்
ஹத்தெரெஸில் இருந்து அலைகளில் நடந்தேறி வந்தன மீன் எலும்புகள்.
மரணம் காதல்மொழி பேசி நீரில் கவர்ந்திழுக்கிறது,
மண்ணிலும் வசீகரிக்கிறது என்பதற்கு
அறிகுறிகள் தோன்றின: பைன் மரங்களுக்கு இடையே
பாசியில் உருளுகிற, அசுத்தமான காற்றை உறிஞ்சி வளர்ந்த,
நீண்ட ஒரு விரியன் பாம்பு.
துயரமான இழப்பென்பது பிறப்பே, இறப்பு அல்ல.
எனக்குத் தெரியும். நானும் அங்கு ஒரு சட்டையை விட்டு வந்தேன்.
“LATE SNOW
Seven years I watched the next-door
Lady stroll her empty mate. One May he turned his head to see
A chrysalis give forth its kleenex creature:
He’d forgotten what they were. But pleasant days she
Walked him up and down. And crooned to him.
He gurgled from his wheelchair, finally
Dying last Fall. I think the birds came
Back too soon this year. The slugs
Have been extinguished by a snow. Still, all the same,
She wasn’t young herself. It must have hurt her legs
To push his weight that way. A late snow hugs
The robins’ tree. I saw it come. The mama withers on her eggs.”
பின்பனி
பக்கத்து வீட்டுப் பெண் தன் காலியான துணையுடன் நடைபழகுவதை
ஏழு வருடங்களாய் பார்த்திருந்தேன். ஒரு மே மாதத்தில் அவன் தனது தலையை உயர்த்தி நோக்கினான்
ஒரு பொற்புழு தனது டிஷ்யூபேப்பர் சிசுவை பிரசவிப்பதைக் காண.
அவை என்னவென அவன் மறந்திருந்தான். ஆனால் மகிழ்ச்சியான தினங்களில்
அவள் அவனை மேலும் கீழுமாய் தள்ளிச் சென்றாள். இதமான குரலில் பாடினாள்.
அவன் தன் சக்கரநாற்காலியில் இருந்து கிளுக்கிளுக் என சப்தமிட்டான், இறுதியாக
கடந்த இலையுதிர் பருவத்தில் இறந்துபோனான் அவன். அந்த ஆண்டில் பறவைகள்
சீக்கிரமே திரும்ப வந்துவிட்டன என நினைக்கிறேன். இலையட்டைகள் ஒரு பனியில் முழுக்க அழிந்து போயிருந்தன. இருந்தாலும், இவ்வளவு ஆகியும்,
அவள் இளமையை இழந்திருந்தாள். அப்படி அவனது எடையை
உந்தித் தள்ளி அவளுக்கு கால்கள் வலித்திருக்கும். ராபின் பறவைகளின்
மரத்தை ஒரு பின்பனி தழுவுகிறது. நான் அது வருவதைக் கண்டேன். தாய்ப்பறவை அடைகாத்தபடி வாடுகிறது.
(அடுத்து வரும் பதிவுகளில் கிளைக்கின் வேறு சில கவிதைகளோடு வருகிறேன்)
அபிலாஷ் சந்திரன்