சமூக வலைத்தளங்களில் தற்போது Jaffna Stallions அணிக்கு ஏன் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதைப்பற்றி ஒரு சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்..
நான் Cricket விளையாட்டுத்துறையில் 25 வருடங்களாக இருந்து வருகிறேன். இதில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக பயிற்றுவிப்பாளராக இருந்து வருகிறேன் (Level 2 certified coach). நான் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் பாடசாலை மட்டத்தில் மட்டுமல்லாது, கழக மட்டத்திலும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விளையாடியுள்ளேன். இலங்கையின் பல மாவட்டங்களிலும் விளையாடிய அனுபவம் உண்டு.
வடக்கு கிழக்கு மாகாண வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் பாடசாலையை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒரு முக்கிய காரணம், இங்கு விளையாடப்படும் cricket’ன் தரத்திற்கும், கொழும்பு மற்றும் வேறு சில மாவட்டங்களின் தரத்திற்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.
எங்களது வீரர்கள் மிகவும் திறமையானவர்கள், அலாதியான ஆர்வம் கொண்டவர்கள், ஆனால் இவர்களுக்கு புற்தரையில் (turf), மின்னொளியில், மற்றும் பல்வேறுவிதமான சூழ்நிலைகளில் விளையாடும் அனுபவம் குறைந்தவர்கள். இவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் விளையாடும்போது, எமது மாவட்டங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளின்மையால் இந்த வசதிகள் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு மேலதிகமாக மனமுதிர்ச்சி, தேவையான அணுகுமுறை, முறையான பயிற்சிமுறை, உணவுப் பழக்கவழக்கங்கள், காயமடைந்தால் எப்படி மீள்வது போன்றவை தொடர்பான அறிவு, அனுபவம் என்பன மிக அரிதாகவே இருக்கின்றது. இது நமது வீரர்களுக்கு பாரிய தடைக்கல்லாகவே உள்ளது. இந்த குறைபாடுகள் முதலில் செய்யப்படவேண்டும். இதை நிவர்த்தி செய்யாமல் எங்கள் பிள்ளைகள் சர்வதேச தரத்திலான போட்டிகளில் விளையாடவேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது
Jaffna Stallions பற்றி கூறுவதாயின், SLC இனால் முன்வைக்கப்பட்ட வீரர்களிலிருந்தே 16 பேர் கொண்ட குழாம் தெரிவுசெய்யப்பட வேண்டும். SLC முன்வைத்த பெயர்ப்பட்டியலில வடக்கு கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இவ்விரு மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் முதல்தர போட்டிகளில் விளையாடாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கழகத்திற்கும் 4 மேலதிக வீரர்களை உதிரிகளாக சேர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வீரர்களை பிரதான 16 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்படமுடியாது. ஆனால் இவர்கள் அணியுடன் சேரந்திருக்கலாம், சேர்ந்து பயிற்சி பெறலாம். 16 பேர் கொண்ட குழாமில் இருந்து யாராவது ஒருவர் ஏதாவது காரணத்திற்காக வெளியேற நேரிட்டால் மாத்திரம் இவர்களுள் ஒருவரை பிரதான குழாமிற்குள் உள்வாங்க முடியும்.
கபில்ராஜ், டினோசன் மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் உதிரிகளாகவே உள்வாங்கப்பட்டனர். ஆனால் இறுதி நேரத்தில் SLC பிரதான குழாமின் எண்ணிக்கையை 18 ஆக அதிகரிக்க முடிவு செய்தது. ஆதலால் வியாஸ்காந்த் இதற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார். தேனுதரன் மற்றும் விஜயராஜ் உதிரிகளாக சேர்த்துக்கொள்ளப்ப்பட்டனர்
எமது வீர்ர்களுக்கு, சர்வதேச தரத்திலான வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம் அளப்பரியது. சக விளையாட்டு வீர்ர்களிடமிருந்தும் பயிற்றுவிப்பாளர்களிடமிருந்தும் பல்தரப்பட்ட விடையங்களை கற்றுக்கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பம் ஆகும்.
இந்த இளைஞர்கள் இனிவரும்காலங்களில் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு பயிற்சியளிக்கப்படவேண்டும். நாங்கள் வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்வதில் முயற்சிசெலுத்தி, எமது மாவட்ட இளைஞர்கள் முதல் தர Cricket விழையாடுவதற்கு வழிவகை செய்யவேண்டும்.
வெற்றி என்பது instant noodles மாதிரி அல்ல. அதற்கு திடமான மன உறுதி, கடின உழைப்பு என்பன அத்தியாவசியம்.
இதற்கு பின்னூட்டம் இடுபவர்கள், தாங்கள் Cricket வளர்ச்சிக்கு எத்தகைய பங்களிப்பு செய்வார்கள் என்று சொன்னால், நாங்கள் 3 or 5 வருடத் திட்டத்துடன் உங்களை தொடர்பு கொள்வோம்.
நன்றி – முகநூல்