கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக மற்றுமொருதொகுதி பரிசோதனைக் கருவிகளை இந்தியா ஒன்பதாவது தடவையாக பூட்டானுக்கு வழங்கியுள்ளது.
பூட்டானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை பூட்டானுக்கு வழங்குவதன் மூலம் அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்திற்குத் தேவையான அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள பெரும் உதவியாக அமையும் என்று இந்தியா கருதுகின்றது.
பூட்டானின் தேவைகளுக்கு இந்தியா அதிகளவில் முன்னுரிமை அளித்து வருவதோடு இதுவரை இந்தியா, பூட்டானுக்கு பெரசிட்டமோல், செனட்ரைசின், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பிபிஇ கருவிகள், என்95 முகக்கவசம், ஆர்டி-பிசிஆர் சோதனை கருவிகள், எக்ஸ்ரே இயந்திரம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்கியுள்ளது.
அதுமட்டுமன்றி கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கும் பூட்டானுடன் இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது. அத்துடன் பூட்டானுக்கான தேவைகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பூட்டானுக்கான தூதர் ருச்சிரா கம்போஜ் கூறுகையில், பூட்டான் கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து மீட்டெருக்கும் செயற்பாட்டில் இந்தியா பக்கபலமாக செயற்படும் என்று குறிப்பிட்டார்.