புதுடெல்லி: “நாடு முழுவதும், முதல் கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிக்காகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். அடுத்த சில மாதத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் வரும் 16ம் தேதி துவங்க உள்ளது. முதல் கட்டமாக, 3 கோடி சுகாதாரத்துறை பணியாளர்கள்உள்ளிட்டமுன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து 11 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துகொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா காலகட்டத்தில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றியது இந்திய கூட்டாட்சிக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். உலகின் மிகப் பெரிய தடுப்பூசி போடும் திட்டம் வரும் 16ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
உலகில் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் 2.5 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இது தவிர, மேலும் 4 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் மலிவானவை. மேலும், நமது தேவைகளுக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு அவை தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்காகும் செலவினை மத்திய அரசே ஏற்று கொள்ளும். கொரோனா பரவலில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் அதன் பரவல், பாதிப்பு மிகவும் குறைவாகும். தடுப்பூசிகள் குறித்த வதந்திகள் பரவாமல் தடுப்பதை மாநிலங்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
கேரளா, ராஜஸ்தான், இமாச்சல், குஜராத், அரியானா, உ.பி., ம.பி., டெல்லி, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பண்ணைகள், விலங்கியல் பூங்காக்களை உன்னிப்பாக கவனித்து நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
அரசியல் தலைவர்கள் முந்தக் கூடாது
முன்களப்பணியாளர்கள் பட்டியலில் எம்பி, எம்எல்ஏக்களையும் சேர்த்து கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டுமென அரியானா மாநில பாஜ அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இருப்பினும், இந்தியாவில் அதனை கடைபிடிக்க முடியாது. கொரோனா தடுப்பூசிக்கு மக்கள் பிரதிநிதிகள் முந்தக் கூடாது. 3 கோடி முன்களப் பணியாளர்கள் பட்டியலில் மக்கள் பிரதிநிதிகள் இடம் பெறவில்லை,” என்று கூறினார்.