தமிழ் நாட்டின் ஸீரோ டிகிரி பதிப்பகம் தமிழரசி அறக்கட்டளை நடாத்திய நாவல் போட்டியில் ஈழ எழுத்தாளர் வாசு முருகவேல் எழுதிய மூத்த அகதி என்ற நாவலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
யப்னா பேக்கரி நாவல் மூலம் இலக்கிய உலகில் அறியப்பட்ட வாசுமுருகவேலின் நான்காவது நாவல் இதுவாகும். மூத்த அகதி எனப் பெயரிடப்பட்ட இந்த நாவல் அறிவிப்பு இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை நாவல் ஆசிரியர் வாசு முருகவேல் தனது முகநூலில் “இந்த மாவீரர் நினைவு நாட்களில் எண்ணற்ற விடயங்கள் என்னுள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பலவற்றையும் எப்போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது என்பது என் வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் துயரம். இந்த எளிய மனிதனால் தமிழ் இனத்திற்கு செய்ய முடிந்ததை எழுத்தின் வழியே செய்து கொண்டிருக்கிறேன்…” இவ்வாறு பதிவு செய்து நாவல் அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்து கவிஞர் தீபச்செல்வன் தனது முகநூலில் “ஈழ விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் மற்றொரு வரவு. அகதியின் வாழ்வையும் போராட்டத்தையும் பேசும் வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’. யப்னா பேக்கரி நாவல் வாயிலாக நன்கு அறியப்பட்ட வாசுவின் புதிய நாவல்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நாவல் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈழ ஆவணப்பட இயக்குனர் சோமீதரன் தனது முகநூலில் ““தமிழ் நாட்டுல தமிழன் நீ அகதியா? ஆமாம் அகதிதான். “ இப்படி ஒரு வசனம் நான் பங்காற்றிய படத்தில் கதாநாயகனால் கேட்கப்படும். அந்த அகதித் தமிழனின் பாடுகளைப் பதிவு செய்யும் அரிதான படைப்புகளில் ஒன்று அண்மையில் வெளிவந்திருக்கும் “மூத்த அகதி “ நாவல். வாசுவும் இன்னுமும் அகதிதான்…” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசி அறக்கட்டளை – ஸீரோ டிகிரி பதிப்பகம் நடாத்திய நாவல் போட்டியில் தேர்வான நாவல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 4ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.