விரைவில் வரவுள்ள ‘அம்மாவின் கட்டைப்பை’ கவிதை நூலில்… சில்க் ஸ்மிதாவுக்கான ஓர் கவிதை.
இவ்வுலகம்
சில்க்குகளை ஏற்பதில்லை
நிராகரிப்பதும் இல்லை
சில்க்குகளை
மோசமெனும் உலகில்
அப்படியொன்றும் நேர்மையில்லை
அதற்கு ரகசியமாய் ரசிக்க
சில்க்குகள் தேவை
பல விழிகள் மொய்க்க
சில்க்குகள் தேவை
ஆம்
தேவைக்கு மட்டுமே தேவை…
சில்க்குகளின் இதயம்வரை
யாரும் ஆழ்ந்து கவனிப்பதில்லை
மேலோட்டமாக ரசிக்கவே
சில்க்குகள் படைக்கப்பட்டதாக
இவ்வுலகமே நம்புகிறது
சில்க்குகள்
பொய்யுரைப்பதில்லை
தன்னில் ரகசியம் காப்பதில்லை
இதனாலேயே
வெளிப்படையாகப் பேச
சில்க்குகளுக்கு அனுமதியில்லை
சில்க்குகளின் நீண்ட ஆயுளை
இவ்வுலகு விரும்புவதில்லை
சில்க்குகளின் தற்கொலை
பலருக்கு நிம்மதி அளிக்கிறது
அவரின் டைரிக்குறிப்புகளில்
எதாவது எழுதப்பட்டிருக்குமோவென
சிலரின் நிம்மதி அழிகிறது
சில்க்குகளை விரும்பிய உலகம்
சில்க்குகளின் விருப்பம் குறித்தும்
சிந்திக்கும் நாள் வரலாம்
அந்த நாளிலிருந்தே
வாழத்தொடங்குவார்கள் சில்க்குகள்…
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்