Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று | பாவலர் அறிவுமதி

நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று | பாவலர் அறிவுமதி

1 minutes read

காட்டையே கருவறை ஆக்கியே
புலிகளைப் பெற்றவன்
பிறந்தநாள் போற்றுவோம்

அறத்திலும் பிழைவிடா
புறத்திலும் பிசைகிடா
அண்ணன் நாள்
ஆராரோ போற்றுவோம்

வல்வெட்டித் துறையானை
வான்முட்டும் புகழானை
திசையெட்டும்
கை தட்டப்போற்றுவோம்

புகழ் முருகன் வேல் வாங்கி
நிகழ் முருகன் துவக்காக்கி
பெரும் படையை உருவாக்கி
வியப்படையச் செய்தவனை
கொற்றவையாள் பிள்ளையென
குலவையிட்டு போற்றுவோம்

அடிப்படையில் பூனைகளாய்
அடங்கிக் கிடந்த
எங்கள் ஒளவையரின்
கைகளிலே அதியன் போல்
நெல்லியினை அன்பில் தாராமல்
ஆயுதங்கள் தனைத்தானே
அள்ளி அள்ளித்தான் கொடுத்து
போர் தொடுக்க வைத்தவனின்
புகழ் சொல்லிப் போற்றுவோம்

பெற்றோரை பிள்ளைகளை
உற்ற துணைவியினை
உலகிலுள்ள தமிழர்களின் உயரத்தில் ஓரடியும் உயர்வென்று கருதாத கவனத்தை வைத்தபடி

கடுகளவும் பிழை சொல்ல
காரியங்கள் செய்யாத
களத்தலைவன்
பெயர் சொல்லி
கனிவோடு போற்றுவோம்

ஆற்றல் மிகு தலைவனுக்கு
ஆராரோ நாள் இன்று

ஏற்ற மிகு தலைவனுக்கு இனிப்பான நாள் இன்று
நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று
விடுதலைக்கு வித்திட்டு விளைய வைப்பான் நாளின்று
படத்திலே பார்த்தாலும் திமிர் கொடுப்பான் நாளின்று
தமிழ்த் திமிர் கொடுப்பான் நாளின்று

அண்ணன் வாழ்க
அண்ணனைப்பெற்ற அன்னையும் வாழ்க

தலைவன் வாழ்க
தலைவனைப் பெற்ற
தாயும் வாழ்க

வாழ்க… வாழ்க…

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More