Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பூக்கும் மனசு | புதுவை இரத்தினதுரை

பூக்கும் மனசு | புதுவை இரத்தினதுரை

1 minutes read

இலை சொரியத் தொடங்கிறது இலுப்பைமரம்.
கலையுடுத்து நாளை கன்னியெழிற் கோலமதாய் அழகொளிரும்,
பூக்கும்,
அதன்பிறகு காய்க்கும்,
பின் பழம் சொரியும்.
இப்போவென் படலையிலே
உள்ள மரம்
ஆடை அவிழ்த்துதறி அழகாய்ப் புதிது உடுக்கும்.
கோடை வறுத்தெடுக்கக் குளிர்விக்கும்.
என வீட்டு முற்றத்தெழுந்த மரம் முறுவலிக்கும்.
நானந்த
அற்புதத்தைக் காணா
அழியும் விதியென் கொல்?
மூக்குத்திப் பூக்கள் மின்னும் கிளையிருந்து
தூக்கம் கலைத்து
என்னைத் தொட்டெழுப்பும் குயிலின்
மாயக்குரலிலென்ன மந்திரந்தான் உள்ளதுவோ?
தாயாயெனைத் தழுவி
தம்பீ என மதுரச்
சொல்லாலென் காதுச்
சோணையிலே உரசிவிட்டு செல்லும்
என் வீட்டுத் தென்றலுக்காய் ஏங்குகின்றேன்.
இடருருவிக் கிடக்கும் என்னை
இப்போ வந்(து)
எவர் தடவியென்ன
என் மேனி ஆறாது.
வேண்டும் என் வீட்டு விருட்சம்
அதனடியில்
ஆண்டிருந்ததனைத்தும் அடியேன் பெறவேண்டும்.

-கவிஞர் புதுவை இரத்தினதுரை

……
“வாழ்வையும் எழுத்தையும் வகைபிரித்து அதுவேறு, இதுவேறு எனச் சொல்லும் இரட்டை வாழ்வு எனக்கென்றுமே இருந்ததில்லை. மற்றவருக்குச் சொல்லமுன்னர் நானே என் எழுத்துக்கு உயிருள்ள சாட்சியமாக இருக்க விரும்புகின்றேன். இதனாற்றான் விடுதலையை அவாவுறும் கூட்டத்திலொருவனாய் என் வாழ்வு அர்த்தமுடன் கழிகிறது.” என்றவரின் வாழ்வு எவ்விதம் முடிந்ததென அறியாது கலங்குகின்றோம்.

2009 ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்தி முடித்த இலங்கை இராணுவம், எஞ்சியிருந்தோருள் போராளிகள், இயக்கத்தோடு தொடர்பிலிருந்தவர்கள் என அடையாளங் காட்டப்பட்ட பலரைச் சிறைப்பிடித்து தன்னோடு கொண்டேகியது. அவ்வாறு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்களுள் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களும் ஒருவர். இன்றுவரை அவர் குறித்த எத்தகவலும் இல்லை.

இன்று கவிஞரது அகவை நாள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More