Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது எப்படி?

சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது எப்படி?

2 minutes read

சிலருக்கு நீரிழிவு நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாவிட்டாலும், அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவுகள் நீரிழிவு நோயின் எல்லைக்குள் இருக்கும். இப்படி சந்தேகத்துக்கு உள்ளாகும் நபர்களுக்கு, ‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் பரிசோதனை’ (சுருக்கமாக OGTT) பரிந்துரை செய்யப்படுகிறது.

இது எப்படிச் செய்யப்படுகிறது? இவர்கள், முதல் மூன்று நாட்கள் வழக்கமான உணவை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு முந்தைய நாள் இரவில் உணவு சாப்பிட்ட பின்பு, பரிசோதனைக்குச் செல்லும் வரை எதையும் சாப்பிடக்கூடாது. 8-ல் இருந்து 12 மணி நேரம் கழித்து, மறுநாள் காலையில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். முதலில் வெறும் வயிற்றில், ரத்த சர்க்கரை பரிசோதிக்கப்படும். இதைத் தொடர்ந்து, அவருக்கு 300 மி.லி. தண்ணீரில் 75 கிராம் சுத்தமான குளுக்கோஸ் மாவை கலந்து தருவார்கள். அதிகபட்சம் 5 நிமிடங்களுக்குள் அதை குடித்துவிட வேண்டும்.

இதிலிருந்து சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தம் எடுத்து, சர்க்கரையை கணக்கிட வேண்டும். அப்போது, ரத்தச் சர்க்கரை அளவுகள் முறையே வெறும் வயிற்றில் 80 முதல் 110 மி.கி./டெ.லி. வரை இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 111 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இல்லை. வெறும் வயிற்றில் 111 முதல் 125 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அது ‘இம்பயர்டு பாஸ்டிங் குளுக்கோஸ்’. அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்பு உள்ளது.

அதாவது, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை- பிரீ டயாபடிஸ். குளுக்கோஸ் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 141 முதல் 199 மி.கி./டெ.லி. வரை இருந்தால், ‘இம்பயர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ்’. இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைதான். வெறும் வயிற்றில் 126 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு. இதற்கு மேல் இருந்தால், ‘கர்ப்பக்கால நீரிழிவு’ என்று அர்த்தம்.

ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதையும், இனிமேல் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்புள்ளதா என்பதையும், சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ள பயன்படும் ஒரு முக்கியமான பரிசோதனை இது. இதில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது என்பது உறுதியானால், அவர் எந்த தயக்கமும் இல்லாமல் நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை பெற வேண்டும். அதேநேரம், நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் – அதாவது, ஐ.எப்.ஜி., ஐ.ஜி.டி. உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுத்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவுக்கான அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் இதைச் செய்துகொள்ள வேண்டும். அறிகுறி எதுவும் தெரியாதவர்கள், 40 வயதில் இதை செய்துகொள்ள வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More