June 2, 2023 1:57 pm

ஆழ்துளை கிணறு பிரச்சினையை மையப்படுத்தும் ‘அறம்’

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பாலி எனும் கிராமத்தை சேர்ந்த ரினா என்ற 3 வயது பெண் குழந்தையொன்று கடந்த மாதம் 26ஆம் திகதி 30 அடியிலான ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து உயிரிக்கு போராடி வருகின்றது. இவ்வாறான உயிரை பறிக்கும் ஆபத்துக்கள் தீர்க்கப்படாத நிலையில் ஆழ்துளை கிணறு  பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் உருவான திரைப்படமே அறம். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நயன்தாராவின் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

இதைப்போன்ற திரைப்படம் 1990களில் மலையாள மொழியில் வெளிவந்தாலும் கூட சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்துளை கிணறு பிரச்சினைக்கு முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை. அந்த வகையில் மக்களின் மனநிலையினை இயக்குநர் தனது ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

விண்வெளிக்கு விண்கலம் அனுப்பும் தொழில்நுட்ப திறமைகளைக் கொண்ட இந்தியாவில் ஆழ்துளை கிணற்றின் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்ற முறையான திட்டங்களோ வசதிகளோ இல்லை என்பதை சமூகத்திற்கு எடுத்துக்கூறும் திரைப்படமாக அறம் அமைகிறது.

இந்த திரைப்படத்தின் காட்சிகள் முழுவதிலும் வறட்சி, வெண்மையை உணர்த்தும் வகையில் Colour Tone பயன்படுத்தப்பட்டுள்ளமை அம்மக்கள் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்துகின்றது.

திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி றஞ்சிகாவை காப்பாற்றுகிறார்களா இல்லையா என்பதை இயக்குநர் காட்சியமைப்புகளின் மூலம் மிகத் தத்ரூபமாக மக்கள் முன்னிலையில் வெளிகாட்டுகின்றார்.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தமக்குரிய பாத்திரங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளமையால் இன்னும் பல ஆண்டுகளாக மக்கள் முன்னிலையில் பேசப்படும் படமாக திகழ்கிறது.

குறிப்பாக மக்கள் நலனுக்காக போராடும் தாசில்தாரரான நயன்தாரா மக்களின் எதிரியாக சித்தரிக்கப்படுகின்றார். பிரதான கதாப்பாத்திரமான சிறுமி றஞ்சிகா திரைப்படம் முழுவதும் பயணிப்பதைக் காண முடிகின்றது.

இவர்களுக்கு அப்பால்ட முக்கிய கதாபாத்திரங்களாக அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் காணப்படுவதுடன் துணை நடிகர்களாக ஊடகவியலாளர்கள், கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள், ஊர் மக்கள் போன்றோர் காணப்படுகின்றனர்.

இந்த திரைப்படம் வெளிவந்த பின்னரும் இந்தியாவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று கூறலாம்.

இவ்விடத்தில் ஒளிப்பதிவாளர் கே பிரகாஷின் பணிகளை குறிப்பிட்டாக வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்த சிறுமியின் அவலங்களை Close Angle Shortமூலம் மிகவும் தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளார்.

சிறுமி தண்ணீருக்கும், சுவாசிக்க ஒட்சிசனுக்கும் படும் அவஸ்தைகளை படம் தாங்கி நிக்கின்றது. இதனை பார்ப்பவர்கள் மத்தியில் வேதனைகளை உருவாக்கும்  வகையில் மிகத் தெளிவாக காட்சி அமைப்பின் மூலம் மக்கள் காணச்செய்கின்றார். இந்த காட்சிகள் பார்வையாளர் மனதில் ஒரு வகையான துயரத்தையும் அரசியல்வாதிகளின் மேல் வெறுப்பையும் உண்டு பண்ணுகிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடலில் காணப்படும் ஒவ்வொரு வரிகளும் மனதில் சோகத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்துவதை உணர முடிகின்றது. உதாரணமாக புது வரலாறு என்ற பாடலின் ஒவ்வொரு வரிகளும் அந்த சிறுமி காப்பாற்றப்படுவாரா, இல்லையா போன்ற ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.

நயன்தாராவின் நடிப்பை பொறுத்தவரையில் மிகச் சிறப்பாக தனது நடிப்பின் மூலம் கதையை நகர்த்தி செல்கின்றார். இந்த திரைப்படத்தில் பெண்ணியம் சார்ந்த கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக ரஞ்சிகா, நயன்தாரா போன்ற பெண் கதாபாத்திரங்கள் முதன்மை கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் மக்களிடம் வந்து வாக்குகளை அள்ளிச் செல்லும் அரசியல்வாதிகள் தேர்தல் நிறைவடைந்த பின்பு மக்களை தேடி செல்வதில்லை. அவர்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதும் இல்லை என அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையிலான வார்த்தை பிரயோகங்களை கையாண்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசும் திரைப்படங்களே நல்ல சினிமாவாக அமைய முடியும். இது போன்ற திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் பிரச்சினைகள் பேசப்படுவதுடன் அது வெறுமனே திரைப்படமாக மட்டுமே இருந்திடாது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவருவதாக அமைய வேண்டும்.

அந்தவகையில் ஆழ்துளை கிணற்று  பிரச்சினைக்கு இந்திய அரசு தீர்வு காணுமேயானால் அது இந்த திரைப்படம் மற்றும் திரைப்பட குழுவின் வெற்றியாகவும் அமையப்பெறும்.

ஜெ.கனிஸ்ரா, 
2ஆம் வருடம் ஊடகக்கற்கைகள்துறை.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்