உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
இது மத்திய, மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா தொற்றுள்ளவர்கள் கண்டறியப்படும் நிலையில் கடந்த இரு நாட்களாக ஒரேநாள் பாதிப்பு 90ஆயிரத்தைக் கடந்து ஏனைய நாடுகளை விட உச்சம் பெற்றுள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதல் நிலையில் உள்ளதுடன் அங்கு இதுவரை 64 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இரண்டாவது நிலைக்கு வந்துள்ள இந்தியாவில் இதுவரை 42இலட்சத்து இரண்டயாயிரத்து 562 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 91 ஆயிரத்து 723 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இதுவே ஒரு நாட்டில் ஒரேநாளில் தொற்று கண்டறியப்பட்ட அதியுச்ச எண்ணிக்கையாகும்.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஆயிரத்து எட்டுப் பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 71 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளன.
முன்னதாக இரண்டாவது இடத்தில் நீடித்துவந்த பிரேசிலில் இதுவரை 41 இலட்சத்து 23 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த வரியைில் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது.
இதேவேளை, இந்தியாவுக்கு ஆறுதல் தரும் விடயம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோரும் அதிகரித்து வருகின்றமையாகும்.
அந்தவகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்மாக 73 ஆயிரத்து 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் தொடர்ந்து இரண்டாவது நாளாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31 இலட்சத்து 80 ஆயிரத்து 865 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்படி, இன்னும் 8 இலட்சத்து 62 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் வீதம் 77.32 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இதைப்போல், இறப்பு வீதமும் 1.72 என்ற அளவில் உள்ளதுடன் இது உலகளவில் மிகவும் குறைந்த சதவீதம் என மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைகளை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருவதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்துள்ளதுடன் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 10 இலட்சத்து 92 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் மொத்த பரிசோதனை எண்ணிக்கை நான்கு கோடியே 88 இலட்சத்து 31 ஆயிரத்து 145 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா பரிசோதனையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உள்ளதுடன் அமெரிக்கா இதுவரை 8 கோடியே 73 இலட்சத்து 37 ஆயிரத்து 214 கொரோனா பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை, உலக அளவில் இரண்டு கோடியே 72 இலட்சத்து 34 ஆயிரத்து 299 பேருக்கு மேல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் எட்டு இலட்சத்து 86 ஆயிரத்து 192 பேருக்கு மேல் மரணித்துள்ளனர்.
அத்துடன் ஒரு கோடியே 93 இலட்சத்து 13 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளமை தற்போதுவரை பதிவாகியுள்ளது.