மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் சட்டமூலங்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டமூலம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டமூலம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டமூலம் ஆகிய 3 சட்டமூலங்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகள் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த சட்டமூலத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 3 சட்டமூலங்களும் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
மாநிலங்களவையில் தற்போது 243 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சட்டமூலம் நிறைவேற இவர்களில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பா.ஜ.க. கூட்டணிக்கு 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
இதனிடையே மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருக்கு கொரோனா இருப்பதால் அவர்கள் அவைக்கு வருவதில் சிக்கல் உள்ளது.
இதனால் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் 3 சட்டமூலங்களும் நிறைவேறும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.